உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவே
சுட்டெரிக்கும் வெய்யிலில்
செங்கனலென எரிந்தன
அவ்விரண்டும்
புள்ளிகளும் தெரியா வண்ணம்
பச்சைக்குள் பதுங்கியிருந்தது
அதன் மஞ்சள்
செந்நா சுழற்றி
பூச்சிகளை
விரட்டிய பின்
பற்களைக் காட்டியபடி
மென்பாதங்களை
எடுத்து வைத்து
மெல்ல நகர்ந்தது
அது..
தூரத்தில்
பெருநதிக்கரையில்
ஆலமர நிழலில்
தனியாய்
கிடைத்த
இலை நுனியெல்லாம்
ருசித்தபடி
பெருவிழிகளை
உருட்டி உருட்டி
வெடுக் வெடுக்கென்று
தலை திருப்பி
இங்கும் அங்கும்
பார்த்தபடி
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
துள்ளிக் குதித்தபடி
பின்னங்காலை உதறி
பறக்க முயன்ற
தன் இரையை நோக்கி..
பின்னொரு நாள்
மொட்டைப் பாறையின்
ஒற்றை
குட்டை மரத்தின்
கவட்டில்
அமர்ந்து
வானத்தைப் பார்த்த படி
மெல்ல அசை போட்டுக் கொண்டிருந்தது
அது
மீண்டும்
அந்நதிக்கரையின்
விழிகளை