இறகு

வியர்த்து
களைத்து
ஊர்ந்து கொண்டிருந்தேன்

எங்கிருந்தோ வந்த
சிறு காற்றின்
ஒர் அலை
என் கன்னம் தொட்டது

தூய வெண்மலரொன்றின்
மென்னிதழாய்

கடவுளின் விரல் நுனியாய்

தண்ணென்றிருந்த
அவ்வலை மீதேறி

அடி வயிறு குறுகுறுக்க
ஒரு நொடி
ஒரு இழை
என் நடை 
தரை விட்டெழும்பத் தான் செய்தது

இனி 
எப்போதும்

மிதக்கத்
துடிதுடிக்கும்
சிறு பூச்சி நான்