எல்லாமுமாய்..

என்னைப் பார்த்து புன்னகைத்தாய்
வாரி ஒக்கலில் அமர்த்திக் கொண்டாய்

மென் முலையில் சாய்ந்து
உன் 
மூக்குத்தி அழகில்
சொக்கிப் போயிருந்தேன்

பேசப் பேச ஒளிகொண்டது
உன் 
முத்துப்பல்லழகு
கற்பூரம் மணத்தது 
உன் 
சொப்பு வாய்

விரல் சூப்பிய படி
கிறங்கிக் கிடந்த நான்
மெல்ல மெல்லக் 
கரையலானேன்

ஒரு துளி மட்டுமே
மிஞ்சியிருக்க

முற்றடங்கும் முன்
கண்டது

உன் நீள்விழியின் 
ஓரத்தில்
ஓர்
கூர் வாள்

குண்டலமாய்
இருந்த
சின்னஞ்சிறு 
நாகம்

அருள் விழியும்
கொலை வாளுமாய்

எல்லாமுமாய் நீ