‘இம்’மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல்’ தொகுப்பிற்கான எதிர்வினைகள் கீழே தொகுக்கப்பட்டிருக்கின்றன:
எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினை:
அன்புள்ள கல்பனா
உங்கள் கடிதத்தைப் படிக்காமலேயே கவிதைக்குள் சென்றேன். முதலில் உருவானது ஆச்சரியம். கவிதையில் இன்று நான் எதிர்பார்ப்பது இரண்டு அடிப்படைத் தகுதிகளை. பொதுவான கவிதைச்சூழலின் எல்லை கடத்தல், தனியான கவிமொழி கொண்டிருத்தல்
இன்றைய நவீனக்கவிதை கூறுமுறை, பேசுபொருள் ஆகிய இரண்டிலும் ஒரு பொதுத்தன்மையை அடைந்துள்ளது. அதிலிருந்து எந்த அளவுக்கு ஒரு கவிதை தனித்து மேலெழுந்துள்ளது என்பதே என் முதன்மையான கேள்வி. அந்த வேறுபாட்டையே முதன்மையாகக் கருதுகிறேன்.
இங்குள்ள கவிதையில் உலகியல் சார்ந்த சில கசப்புகள், சிலவகை கோபங்கள், தனிமையின் சோர்வுகள் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. சிலவகை மீறல்கள் எழுதப்படுகின்றன. இவை ஒருவரின் தனியாளுமையின் வெளிப்பாடாக இல்லாமல் ஒரு காலகட்டத்தில் எழுதும் அனைவருக்கும் பொதுவான குரலாக அமைகையில் தேய்வழக்குகளாகின்றன. எல்லா கவிதையும் ஒரே குரல் என ஒலிக்கிறது.
இரண்டாவதாக, மொழிநடை. பயிற்சியற்ற முகநூல்நடையிலேயே இன்று பெரும்பாலானவர்கள் கவிதைகளையும் எழுதுகிறார்கள். கவிதைமொழிக்கு உள்ளிசை இன்றியமையாதது. முழுக்கமுழுக்க முகநூலிலேயே எழுதினாலும் கவிஞனின் கவிமொழிக்கு இசைமை இருக்கும் என்பதற்கு போகனின் கவிதைகள் உதாரணம். நான் கவிதையில் எதிர்பார்ப்பது மொழியின் வீச்சை. இனிமையாக,கூர்மையாக, தெளிவாக, மயக்கமாக.
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது. கவிஞர்தான் நீங்கள்.
‘துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை’ ‘உச்சிக்கூடுகட்டி உயிர்புரப்பாய்’ என்பதுபோன்ற வரிகளே கவிதையில் என்னைப்போன்ற ஒருவன் எதிர்பார்ப்பது. ஒரு நாளுக்கு இருநூறு பக்கங்களுக்குக் குறையாமல் வாசிப்பவன், தத்துவம் இலக்கியம் ஆன்மிகமென்று தேடிக்கொண்டிருப்பவன், ஒருநாளுக்கு ஆறுமணிநேரம் எழுதுபவன், அதற்கப்பால் அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் இருப்பது கவிஞரின் இத்தகைய சொற்சேற்கைகளில்தானே ஒழிய எளிமையான கருத்துக்களிலோ உணர்வுகளிலோ அல்ல.
வாழ்த்துக்கள். இத்தொகுதியில் எனக்கு உகக்காத ஒரு கவிதைகூட இல்லை என்பது உண்மையிலேயே திகைப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுகிறது
ஜெ
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் எதிர்வினை
