மீன்காரி

வலையை வீசிவிட்டு
காத்திருக்கிறேன்

ஒரு அசைவும் இல்லை

எல்லா நாட்களும் அப்படி அல்ல

அமாவாசை பௌர்ணமிகளில்
நல்ல பாடுண்டு

அன்றெல்லாம்
மணக்க மணக்க வைத்துண்பேன்

எத்தனை நாட்கள் வைத்துண்பது
உப்புக் கண்டமும் போட்டு
வைத்துக் கொள்வேன்

இதையும் அதையுமாக
சுமந்தலைந்து
தினமும்
கூவிக் கூவி விற்றுக் கொண்டும் தான்
இருக்கிறேன்..