தேனின் ஒழுக்கு

முதன் முதலில் உன்னைப் பார்த்த போது
காற்றிலாடும் கொடியாய் படபடத்துக் கொண்டிருந்தாய்

துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை

சிட்டுக்குருவி

பின்
மெல்ல மெல்ல கால்கள் தரித்தன
கண்கள் சாந்தம் கொண்டன
உதடுகள் குறுநகை பூத்தன
அமைந்திருக்கலானாய்
இயைந்திருந்தோம்

இதோ விட்டகலவும் போகிறாய்
இனிய நினைவுகளாய் 
உன்னை என்னில் நிறைத்து விட்டு

எல்லாருக்கும்
எல்லாவற்றிலும்
இது
இத்தனை இனிமையாய்
இத்தனை சுலபமாய்
தேனின் ஒழுக்காய்
அமைந்து விடுமா என்ன