சுவாதித் திருநாள் மஹாராஜா இயற்றிய ஒன்பது நவராத்திரி கிருதிகளில் முதலாவது ‘தேவி ஜகஜ் ஜனனி’ என்ற இந்தக் கிருதி. அவர் இதை ராகம் சங்கராபரணத்தில் இயற்றியிருக்கிறார்.
திருவனந்தபுர அரண்மனையில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒன்பது நாட்களும், ஒரு நாளுக்கு ஒரு ராகத்தை முக்கிய ராகமாக எடுத்துப் பாடுகின்றனர்.
ஒரு சுவையான கதை. கம்பர், காலமாவதற்கு முன், தான் வழிபட்டு வந்த சரஸ்வதி சிலையை ஒரு சேர மன்னனுக்கு அளித்ததாகச் சொல்கின்றனர். அதைச் சேர மன்னர்கள் பத்மநாபபுரத்தில் ஸ்தாபித்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரை மாற்றும் போது, சரஸ்வதி சிலை அங்கேயே இருந்து விட்டிருக்கிறது. அதை உணர்ந்த சுவாதித் திருநாள் மகாராஜா, நவராத்திரியின் போது சரஸ்வதி சிலையை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, இதற்காகவே கட்டிய நவராத்திரி மண்டபத்தில் வைத்து இசை உற்சவம் நடத்தியிருக்கிறார். அந்த உற்சவத்துக்காகவே அவர் எழுதிய ஒன்பது கிருதிகளில் முதலாவது ‘தேவி ஜகஜ் ஜனனி’.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர். ஸ்ரீசக்ரத்தையும் அதன் ஒன்பது அடுக்குகளையும் அவர் இந்த நவாவரணப் பாடல்களில் விவரிக்கிறார். தியானப் பாடலான இது, ஒன்பது பாடல்களுக்கும் முன்னால் வருவது.