வெற்றி-ஜெயமோகன்=சிறுகதை விமர்சனம்

Traditional Tamil Lady in Ceylon | Vintage india, Vintage ...

இக்கதை பெண் பந்தயப் பொருளாவதைப் பற்றியது என்பதால் வாசித்தபோது கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துத் தான் சமநிலையை மீட்டுக் கொண்டேன்.

இரண்டாம் முறை வாசித்தேன். இம்முறை கதை புதிய கோணத்தில் புரிய ஆரம்பித்தது. லதா தான் வென்றிருக்கிறாள் என்று மெல்லிய சந்தேகமாகத் தோன்றி பின்னர் உறுதியானது.

சில புள்ளிகள் முக்கியமானவையாகப் பட்டன:

  1. ரங்கப்பர் தான் தோற்று விட்டதாக ஒப்புக் கொண்டு நமச்சிவாயத்துக்கு ஐந்து லட்சங்களைத் தருகிறார்.

அ) அவர் பொய் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டால், அத்தனை சுலபமாக தான் வெற்றி பெற்றதை அறிவிக்கும் வாய்ப்பை அவர் ஏன் தவற விடுகிறார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் கெட்டுப் போகக் கூடாது என்ற எண்ணம் தான் காரணமென்றால், அவர் இந்த ஆபத்தான பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கவே மாட்டார். அவருக்கு இது போன்ற விளையாட்டுக்கள் புதியன அல்ல. அவற்றின் வெற்றிகளை பிரகடனப்படுத்துவதில் அவருக்கு எந்த தயக்கங்களும் இல்லை. கோமளவல்லியின் கதையே அதற்கு சாட்சி. ஆனாலும் லதாவின் விஷயத்தில் அவருக்கு கிடைத்த வெற்றியை மறைக்கிறார் என்றால், அவர் லதாவையும் கோமளவல்லியையும் ஒரே தட்டில் வைக்க வில்லை. அவரின் பாவனையான அக்கறை ஏதோ ஒரு நிமிடத்தில் உண்மையானதாக மாறியிருக்கிறது.

ஆ) அல்லது அவர் பொய்யே சொல்ல வில்லை. உண்மையில் அவருக்கு வெற்றியே கிட்டவில்லை.இந்த இரண்டு சாத்தியங்களிலும் வெற்றி பெற்றவள் லதாவே.

  1. கதை வெள்ளையர்கள் சென்றபின் 50-களில் நடக்கிறது. 30 வருடங்கள் கழித்து 80-களில் ரங்கப்பர் இறக்கிறார். ராயல் கோட்ஸ் என்ற நிறுவனம் 70-களில் மூடப்படுவதாக ஒரு குறிப்பு கதையில் வருகிறது. அதாவது, ரங்கப்பர் தலையெடுத்தவுடன் 10 மடங்கு லாபம் சம்பாதித்த அந்நிறுவனம், அவர் காலத்திலேயே அழியவும் செய்கிறது, என்றால் என்ன நடந்தது, ரங்கப்பர் வாழ்வில்? ”எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது” என்று சொல்லி பந்தயத்தை முடிக்கும் ரங்கப்பர், அதற்குப் பின் ஏன் லௌகீக வெற்றி பெற முடியவில்லை?

கதை மௌனமாக இருக்கும் இந்த இடத்தை நான் இவ்வாறு நிரப்பிக் கொள்கிறேன். ரங்கப்பர் லதாவிடம் காட்டும் பாவனையான அக்கறை ஏதோ ஒரு நிமிடத்தில் உண்மையானதாக, காதலாக மாறுகிறது. ஆனால் அவர் என்ன செய்த போதும் அவள் அவருடன் வரப்போவதில்லை. அதனால் அவரின் மிச்ச வாழ்வு வெறுமை சூழ இருக்கிறது. அவருக்கு லௌகீகத்தில் /வெற்றியில் ஆர்வம் போய் விடுகிறது. அவர் மீது இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள லதாவே இப்போதும் வெற்றி பெறுகிறாள்.

  1. அந்தக் கடைசி இரவுக்குப்பின்னான உடல் மொழிகள்-ரங்கப்பர் கையை கட்டிக் கொண்டு வேறு பக்கம் பார்க்கிறார்- அவரால் லதாவை பார்க்க முடியவில்லை. இவை குற்றவுணர்வு கொண்டவரின் உடல் மொழிகள். தன் உதவியின் பின்னாலுள்ள உண்மையான நோக்கம் அவளுக்குத் தெரிய வந்ததால் குற்றவுணர்வு கொண்டிருக்கலாம்.

ஆனால் லதா கூனிக் குறுகவில்லை. அவள் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறாள்-//ஒரே நாளில் அவளுக்கு பத்து பதினைந்து வயது கூடிவிட்டது போல தோன்றியது. அவள் அறிந்த வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது போல. அவளுடைய உடலுக்குள் இருந்து இன்னொரு பெண் வெளி வந்து அமர்ந்திருப்பது போல//- அவளுக்கு இந்த பந்தயத்தைப் பற்றி, நமச்சிவாயத்தின்/ ரங்கப்பரின் உண்மை முகத்தைப் பற்றி அவ்விரவில் தெரிய வந்திருக்கிறது. அவளின் அத்தனை வருட திருமண வாழ்வும் பொருளிழந்ததால் வந்த அதிர்ச்சியது.

//அவள் பார்வை வேறு எங்கோ வெறித்திருந்தன. நீர்பரவியது போலிருந்தன விழிகள்.//அவள் கணவன் அவளுக்கு இழைத்த துரோகத்தினால் நேர்ந்தது இது. பகடைக்காயாக ஆக்கப் பட்டதால் உண்டான சிறுமை உணர்வு இது.

// ஆனால் அப்போது மிக அழகாக இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது.// அவ்வொளி அவள் வெற்றி பெற்றதால்/இணங்க மறுத்ததால் அவளுக்கு கிடைத்திருக்கலாம். ரங்கப்பர் அவள் மீது கொண்டுள்ள காதலை எண்ணியும் இருக்கலாம்.

  1. //இறப்பதற்கு முன் அவள் என்னிடம் ஓர் உண்மையைச் சொன்னாள். அந்த ஐந்துலட்சம் அவளை ஜெயித்ததற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசுதான்// இது லதா நமச்சிவாயத்துக்கு தரும் தண்டனை. ஜெயித்தது என்பதை மனதளவில் ஜெயித்ததாகவும் கொள்ளலாம் அல்லவா?